×

முத்திரைத்தாள் விற்பனையில் முறைகேடு

திருப்பூர், டிச.31:  முத்திரைத்தாள் விற்பனையில் நடக்கும் முறைகேடு கள ஆய்வு மூலம் கண்டறியப்பட வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் சார்பில் நுகர்வோர் தின விழா திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது. அதன் தலைவர் காதர்பாஷா தலைமை வகித்தார். பொது செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சென்னியப்பன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் கவிதா, நுகர்வோர் சட்டம் குறித்து பேசினார். பூண்டி ரோட்டரி தலைவர் ஹரிவீர விஜயகாந்த் பேசினார்,
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : பூண்டி பேரூராட்சி, சிறப்பு நிலை தகுதிக்கு உயர்ந்துவிட்ட நிலையில் நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். அதுவரை கூப்பிடு பிள்ளையார் கோவில் ஹவுசிங் யூனிட் அருகில், அனைத்து பஸ்களும் சில நிமிடம் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு அவற்றை விற்கின்றனர். இந்த முறைகேடு தவிர்க்க துறை அதிகாரிகள், கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த விலையில் முத்திரைத்தாள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவிநாசி மெயின் ரோட்டில், பிரதான குடிநீர் குழாய் இணைப்பு அவ்வப்போது உடைகிறது. குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் மத்தியில் உரிய ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்தது